அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் 13வது வருடாந்தப் பொதுப் பேரவைக் கூட்டமானது “நம்பிக்கையுடன் நல்ல விதைகளை நாட்டுவோம்” எனும் கருப்பொருளில் 2025 மே மாதம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் திருச்சபைத் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதல் நாள் பேரவைக் கூட்டமானது காலை 9.45 மணியளவில் இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது. இவ் வழிபாட்டினை கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் அதிபர் அருட்பணி. ஏ. கமலக்குமாரன் அவர்கள் தலைமையில் கிழக்கு மற்றும் வன்னிப் பிராந்திய அங்கத்தவர்கள் இணைந்து நடாத்தினார்கள.; திருச்சபையின் தலைவர் அருட்பணி ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்கள் யாத்திராகமம் 18ம் அதிகாரம் 12-27 வரையான திருமறைப் பகுதியை மையப்படுத்தி இறை செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.
இக் கூட்டத் தொடருக்கான பதிவுச் செயலாளர்களாக திரு. கே. றெஜினோல்ட், அருட்பணி. சுதாசினி சுதாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். திருச்சபையின் செயலாளரால் 13வது வருடாந்தப் பொதுப் பேரவைப் கூட்டத்திற்கான அங்கத்தவர்களின் வரவு பதிவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சபையின் தலைவர் பிதா, குமாரன், பரிசுத்தாவியானவரின் பேரினால் 13வது வருடாந்தப் பொதுப் பேரவைக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
2024ம் ஆண்டு பேரவைக் கூட்டங்களுக்குப் பின்னர் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தவர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் ஏறெடுக்கப்பட்டன. இப்பிரேரணைகளில் பின்வருபவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது: அருட்பணி. ஜெ. அன்ரனி சுதாகர் (அருட்பணியாளர் சி.ஏ.சி.எம்) கத்தோலிக்கத் திருஅவையின் போப் பிரான்சிஸ் மற்றும் மட்டு அம்பாறை இளைப்பாறிய ஆயர் யோசேப் பொன்னையா ஆகியோருடன் கடந்த காலங்களில் பேரவையின் அங்கத்தவாகளாக இருந்த திரு. வி. எஸ். இராசதுரை (சத்தியபுரம் திருச்சபை) திரு. ப. சந்திரசேகரம் (நுணாவில் திருச்சபை) திரு. சேவி சுப்பிரமணியம் (கோணாவில் திருச்சபை) திரு. க. சிவக்குமார் (உடப்புசலாவ திருச்சபை) இவர்களின் வாழ்வுக்கும் பணிக்குமாக இறைவனுக்கு நன்றி செலுத்தி அருட்பணி. ரி. ஈ. அசோக்குமார் மற்றும் அருட்பணி. டி. எஸ். மதியாபரணம் ஆகியோர் செபத்தில் வழிநடத்தினார்கள். தொடர்ந்து அருட்பணி. ஜெ. அன்ரனி சுதாகர் அவர்களிற்கான இரங்கலுரையினை கிறிஸ்த இறையியல் கல்லூரியின் அதிபர் அருட்பணி. ஏ. கமலக்குமாரன் அவர்கள் வழங்கினார்.
திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ் தேவகுணானந்தன் அவர்கள் “நம்பிக்கையுடன் நல்ல விதைகளை நாட்டுவோம்” என்னும் பேரவையின் தொனிப் பொருளில் தலைமையுரையை ஆற்றியதுடன் பேரவைக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.
இதன் பின்னர் திருச்சபையின் சட்டபூர்வ நிலமைகள் குறித்து திருச்சபையின் தலைவர் அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அவர்களாலும் திருச்சபையின் பொருளாளர் திரு. என். கே. ரமேஸ்குமார் அவர்களாலும் விளக்கமளிக்கப்பட்டது. எமது திருச்சபைக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பிரதான வழக்கு மனுதாரர்களால் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் மேல் முறையிட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக அமெரிக்கன் சிலோன் மிசனின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பரிபாலிக்கும் அதிகாரம் தி அமெரிக்கன் சிலோன் மிசனின் உத்தியோகத்தர்களான அருட்பணி. ஏ. எஸ். தேவகுணானந்தன் அருட்பணி. ஏ. பி. தேவதாஸ், திரு. என். கே. ரமேஸ்குமார் ஆகியோருக்கே இருப்பதாகவும் அதற்கான அறிவித்தல் 23.05.2025 பத்திரிகையின் ஊடக வெளியிடப்பட்டிப்பதாகவும் இவர்களால் பேரவைக்கு தெரிவிக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த 12வது வருடாந்த பொதுப் பேரவைக்கூட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்கள், சேர்க்கைகள், கருத்துப் பரிமாற்றங்களின். பின்னர் ஏற்றக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் 26.04.2025 அன்று நடைபெற்ற இறுதிச் செயற்குழுவின் கூட்ட அறிக்கை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களின் பின்னர் ஏற்றக்கொள்ளப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின் பின்னர் நான்கு பிராந்தியங்களின் அறிக்கைகளும், அருட்பணியாளர் ஒன்றிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் நன்றியுடனும் பாராட்டுக்களுடனும் ஏற்றக்கொள்ளப்பட்டன. அருட்பணி. ஜொசேப் ஜெயசீலன் அவர்களின் ஜெபத்துடனும் திருச்சபையின் தலைவருடைய ஆசீர்வாதத்துடனும் முதல் நாள் கூட்டம் மாலை 5மணிக்கு நிறைவுற்றது.
13வது வருடாந்தப் பொதுப் பேரவைக் கூட்டத்தின் இரண்டாம் நாள் கூட்டமானது 2025 மே மாதம் 24ம் திகதியன்று காலை 9.00 மணியளவில் இறைவழிபாட்டுடன் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இவ் வழிபாட்டினை கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் அதிபர் அருட்பணி. ஏ. கமலக்குமாரன் அவர்கள் தலைமையில் யாழ் மற்றும் கொழும்பு மலையக பிராந்திய அங்கத்தவர்கள் இணைந்து நடாத்தினார்கள். கொழும்பு மலையக பிராந்தியக் குருமுதல்வர் அருட்பணி ராஜன் றொகான் அவர்கள் யோவான் 16ம் அதிகாரத்தை மையப்படுத்தி இறை செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். இருநாள் வழிபாடுகளும் அருட்பணி. எஸ். யூட் வினோதன், திருமதி. கே. சுஜானு ஆகியோரது இசைமீட்டலுடன், திருமதி. ரி. நிரூஜா அவர்களின் பாடல் வழிநடத்தலுடன் சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டின் பின்னர் திருச்சபையின் செயலாளரால் 13வது வருடாந்தப் பொதுப் பேரவைப் கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்விற்கான அங்கத்தவர்களின் வரவு பதிவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சபையின் தலைவர் பிதா, குமாரன், பரிசுத்தாவியானவரின் பேரினால் 13வது வருடாந்தப் பொதுப் பேரவைக் கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சேவைத் திருப்பணி மன்றின் அறிக்கை அதன் இயக்குனரால் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் பாராட்டுக்களுடன் ஏற்றக்கொள்ளப்பட்டது. பரி. யோவான் தொழிற்பயிற்சி நிலைய அறிக்கை அதன் அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் நன்றிகளுடனும் பாராட்டுக்களுடனும் ஏற்றக்கொள்ளப்பட்டது.
கிறிஸ்த இறையியல் கல்லூரியின் அறிக்கை அதன் அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டது. கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பேரவையால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் புதிய ஊழியர் அறிமுகமும் ஏற்றுக்கொள்ளுதலும் இடம்பெற்றது. இதன் பிரகாரம் சகோ. எஸ். அற்புதஜீவன், சகோ. சி. ஹரோன், சகோ. வை. டொறின்ரன் டானியல் ஆகியோர் தமது நான்கு வருட இறையியல் கல்வியை நிறைவுசெய்து தற்போது திருப்பணிகயில் ஈடுபடத் தகுதியுடையவரர்களாக உள்ளனர் என கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் அதிபரினால் அவர்கள் மூவரும் அறிமுகப்படுத்தப்பட, அவர்களை பேரவை ஏற்றுக்கொண்டது.
மதிய உணவு இடைவேளையின் பின்னர் சிறுவர் மற்றும் சமயக் கல்விக் குழுவினதும் வாலிபர் பணிமன்றினதும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை பாராட்டுக்களுடனும் ஏற்றக்கொள்ளப்பட்டன. திருச்சபையின் கணக்கறிக்கைகள் பொருளாளர் திரு. என். கே. ரமேஸ்குமார் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளைப்பாறும் குருமார்களான அருட்பணி. ஜொசேப் ஜெயசீலன், அருட்பணி. ஜெரோம் போல் ஆகியோருடைய சேவை நீடிப்புக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
சென்ற ஆண்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் மற்றும் உயர் கல்வி பெற்றவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. அருட்பணி. ஜொசேப் ஜெயசீலன், அருட்பணி. பி. ராஐன் றொகான், அருட்பணி எஸ். ஐ. ஆனந்தராஐன் மற்றும் கலாநிதி. தர்சன் அம்பலவாணர் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றவர்களாகவும் அருட்பணி. எம். ஜெயானந்தராஜா, அருட்பணி. எம். நேசன் கெனடி ஆகிய இருவரும் முதுகலைமாணி பட்டம் பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டு இவர்களில் பேரவைக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். பின்னர்கூட்டமானது திருச்சபைத் தலைவரின் ஜெபத்துடனும் ஆசீர்வாத்ததுடனும் மாலை 6.15 மணியளவில் முடிவுற்றது.